திங்கள், 26 செப்டம்பர், 2011

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்!?

நாள் 1

இன்று காலை வழக்கமாக செய்தித்தாள் வாங்கும் கடையில் (தம் அடிக்கும் கடையில்) நண்பனை சந்தித்தேன். செப்டெம்பரிலும் கொழுத்தும் சென்னை வெய்யிலில் கோட் மாட்டிக்கொண்டு நின்றிருந்தான். 

"என்னடா இந்த வெய்யில்ல கோட் எல்லாம்?"

 என்றால் சலித்து கொண்டே பதில் சொன்னான்.

"என்னடா பண்றது? இன்னைக்கு Client meeting. London ல இருந்து clients எல்லாம் வர்றாங்க. Fully formal ன்னு சொல்லிட்டாங்க. சரி. நான் கெளம்புறேன். ஒரே புழுக்கமா இருக்கு. AC குள்ள போனாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்."

என்று வாகனத்தை உதைத்து கிளப்பினான்.

நாள் 2

போன வாரம் ஒரு பெரிய வேலையை நேரத்தில் முடித்து கொடுத்தோம். அதை பாராட்ட எங்கள் நிறுவன உயர் அதிகாரி 

"விருந்து வைக்கிறேன். எங்கே போகலாம்?"

 என்று கேட்க, 

இருக்கும் 10 பேரில் 9 பேர் "KFC" என்றனர். நானும் போக வேண்டியதாயிற்று. அது என்ன KFC மோகமோ தெரியவில்லை. அவர்கள் கொடுக்கும் Chicken அவ்வளவு சுவை; அலாதியாக இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. வெந்த கோழியை சோ மாவு பூசி வறுத்து  கொடுக்கிறார்கள். உப்பு சப்பு ஒன்றும் கிடையாது. அந்த சிறிய Ketchup packet-கள் இல்லை என்றல் அதை சாப்பிடவே முடியாது. இதற்க்கு நூற்று கணக்கில் விலை.

அதே நாள், அதே நேரம்

பட்டியல் பார்த்து, என்ன சாப்பிடுவது என்று குழம்பி கொண்டிருந்தார்கள். நான் போய் 

"அந்த "Meal box"ல் என்ன என்ன இருக்கும்?"

 என்று கடை சிப்பந்தியை கேட்டேன். தமிழில் தான் கேட்டேன். அவன் சொன்னது,

"You'll get a normal burger with french fries and a soft drink sir. You may opt for two hot wings instead of french fries sir".
பார்பதற்கு தமிழன் போல தான் இருந்தான். அப்பொழுது ஒன்றும் அவனை கேட்கவில்லை. எல்லாம் சாப்பிட்டு முடிந்து வெளியே போகும் பொது அவனிடம் கேட்டேன். 

"ஏன் நீங்கள் தமிழில் பேசாமல் ஆங்கிலம் பேசுகிறீர்கள்?" என்று. அதற்கும் ஆங்கிலத்தில் தான் பதில் சொன்னான்.

"Company policy sir".
என்ன கொடும சார்?

இரண்டு நாட்களில் மூன்று வெவ்வேறு அடிமைத்தன செயல்களை பார்க்க முடிகிறது. இன்னும் இதை போன்று எத்தனயோ அடிமை செயல்களை நாம் செய்து கொண்டு தான் இருகின்றோம். வருடத்தில் 10௦ மாதங்கள் வெப்பமாக இருக்கும் நம் சென்னை போன்ற ஊர்களில் கோட் அணிவது தேவைதானா? குளிர் பிரதேசங்களில் இருந்து வருபவர்களே இங்கு வந்த பின் நம் வெப்ப நிலைக்கு ஏற்றர்போல் உடை அணிகிறார்கள். அனால் நம் ஊரில் செருப்பு அணிந்து சென்றால் பல ஹோல்டேல்களில் உள்ளேயே விடுவதில்லை. ஒரு வேளை என் தோலும் வெள்ளை நிறமாக இருந்து, தலையும் தங்க நிறத்தில் இருந்தால் நான் ஜட்டி மட்டும் அணிந்து சென்றாலும், குனிந்து சலாம் வைத்து உள்ளே அனுப்புவார்களோ?

என் சொந்த ஊரில், என் முன்னோர்கள் காலம் காலமாக அணிந்த காலணிகளை போன்று நான் அணிந்தால், என் சொந்த ஊரிலேயே, எனக்கு அனுமதி இல்லை என்கிறான் வேறு எங்கோ இருந்து இங்கு வந்து வர்த்தகம் செய்யும் ஹோட்டல் காரன். இப்படித்தான் வெள்ளையனும் உள்ளே புகுந்தான், நம்மை 300௦ ஆண்டுகாலம் ஆட்சி செய்தான் என்பதை எவ்வளவு சுலபமாக மறந்து விட்டோம்?

வேற்று நாட்டவன் இங்கே வந்து ஒரு அரசாங்கம் அமைத்து, பஞ்சாயத்து செய்தல் தான் அவன் நம்மை ஆள்கிறான் என்று இல்லை. இப்போதும் மறைமுகமாக, ஏன், நேரடியாகவே நம்மை ஆண்டு கொண்டுதான் இருக்கிறான். இப்பொழுதும் நம் பொருளாதாரம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நம்பி தானே இருக்கின்றது? அமெரிக்க வங்கி தன்
 விருபத்திற்கு கடன் வழங்கி உருவான அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியில், நம் நாட்டில் எத்தனை வேலைகள் போயின? எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்? RBS போன்ற வங்கிகள் தங்கள் outsourcing வேலைகளை நிறுத்தி கொண்டதில் இங்கு எத்தனை வீடுகளில் அடுப்பு அணைந்தது? இது நடந்து இன்னும் 2 வருடங்கள் கூட முடியவில்லை. இதையும் மறந்து விட்டு, மீண்டும் அவனிடமிருந்து வந்த வேலைகளையே செய்து கொண்டிருக்கிறோம். இதோ, மீண்டும் ஒரு "பொருளாதார மந்த நிலை வரும் என்று எதிர் பார்க்க படுகிறது" என்று, வானிலை அறிக்கை போல் சொல்கிறார்கள். மீண்டும் வேலைகள் போக போகின்றன. என்ன செய்ய போகிறோம்? தங்கள் சுய பொருட்களையே (products) தயாரித்த, உள்நாட்டு வேலைகளையே (internal projects and domestic projects) பார்த்த எங்களை போல எத்தனையோ சிறு, பெரு நிறுவனங்கள் யாரையும் வேலை இல்லை என்று வெளியில் அனுப்ப வில்லையே? சிந்திப்போம்.

இந்த IT revolution எனப்படும் தகவல் புரட்சி நடந்து வரும் சென்ற 10-15 ஆண்டுகளில் நம் சொந்த தயாரிப்பு, இந்திய தயாரிப்பு என்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எத்தனை பொருட்கள் இருக்கிறது? விரல் விட்டு கூட எண்ண முடியாது. ஏன்? அப்படி எதுவும் இல்லை என்பதால்தான்.

அன்றாட வாழ்வில், தமிழிலிலேயே பேச வேண்டும் என்று நான் ஒரு நாள் முடிவெடுத்து, நாம் அன்றாடம் புழங்கும் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொல் தேடியபோது ஒரு உண்மையை காண முடிந்தது. பெரும்பாலான கலை சொற்கள், ஆங்கிலத்தில் இருந்து அப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்ட சொற்றொடர்களே. இவை சொற்கள் அல்ல. சொற்றொடர்கள் (phrases). நாம் எதையாவது கண்டு பிடித்திருந்தால், உருவாக்கியிருந்தால், அதற்க்கு ஒரு சொல்லையும் உருவாக்கியிருப்போம். மொழி மாற்றம் செய்து கொண்டு இருக்க மாட்டோம்.

சென்ற இரண்டு தலைமுறையும் B.Sc. Botany படித்து விட்டு, வங்கியில் நோட்டு எண்ணினார்கள். இன்று ஜகந்நாதன் B.E. Mechanical படித்து விட்டு, "Hi. This is John speaking. Thank you for calling. How may I help you sir?" என்கிறான்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?!
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?!
என்று முண்டாசுக்கவி கேட்டதற்கு நமக்கு இன்னும் விடை தெரியவில்லை. நம் அடுத்த தலைமுறையையாவது இதை போன்று அடிமை மோகத்திலிருந்து காப்பாற்றுவோம். 

0 comments:

கருத்துரையிடுக